Advertisment

சவுக்கு சங்கர் வழக்கு; நீதிபதி ஜெயச்சந்திரன் இதை தவிர்த்து இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

உயர்நீதிமன்றத்தின் கற்றறிந்த நீதிபதி தனது சக நீதிபதி மீது சில கருத்துக்களை கூறியுள்ளார், அதைத் தவிர்த்திருக்க வேண்டும் – சவுக்கு சங்கர் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

author-image
WebDesk
New Update
jayachandran GR Swaminathan

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி சுவாமிநாதன்

யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பிக்கும் போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கடுமையான கருத்துகளை கூறுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisment

பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் தெரிவித்தது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகளில் பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சவுக்கு சங்கர் கைதை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்தநிலையில், சவுக்கு சங்கர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் அதன் விளைவாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் எடுத்த தீர்ப்பை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுவை (SLP) தள்ளுபடி செய்யும் போது உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்தக் கருத்துக்களை தெரிவித்தது.

நீதிபதிகள் ஷுதான்ஷு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் பெஞ்ச், “உயர்நீதிமன்றத்தின் கற்றறிந்த நீதிபதி தனது சக நீதிபதி மீது சில கருத்துக்களை கூறியுள்ளார் அதைத் தவிர்த்திருக்க வேண்டும். தீர்ப்பு வழங்குவதற்கும் ஒருவர் குறித்து தீர்மானிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாம் எப்போதும் நினைவில் கொள்வது அவசியம்,” என்று தெரிவித்தது.

வழக்கு விசாரணையை முடிப்பதற்கு முன், உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மற்றொரு நீதிபதியைப் பற்றி கருத்து தெரிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றம் எச்சரிக்கைக் குறிப்பை தெரிவித்தது. சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சவுக்கு சங்கர் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணையின்போது மே 24 அன்று, நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பி.பி பாலாஜி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். 

நீதிபதி சுவாமிநாதன் தடுப்புக்காவல் உத்தரவை ரத்து செய்த நிலையில், இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் அரசு தனது எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி பாலாஜி கருதினார். இதனையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பாலாஜியின் கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்தார். இந்த விமர்சனத்தை தவிர்த்திருக்க வேண்டும் என்று இப்போது உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே மற்றும் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆகியோர், மனுதாரரின் வழக்கை விரைவாகத் தீர்ப்பதற்கு நீதிபதி ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்பு அவர்கள் ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைப்பதாக தெரிவித்ததையடுத்து உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

“தடுப்புக் காவலில் வைப்பது தொடர்பான விஷயத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துமாறு உயர் நீதிமன்றத்தை நாங்களும் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ளபடி, உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டதால் வழக்கின் தகுதி குறித்து நாங்கள் எதுவும் கூறவில்லை, ”என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தலா ரூ.50,000 வீதம் இரண்டு ஜாமீன்கள் வழங்கியதை அடுத்து சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினர்.

வியாழன் அன்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, சவுக்கு சங்கரின் தாயார் கமலாவின் வழக்குரைஞர் பாலாஜி சீனிவாசன் வெள்ளிக்கிழமை நீதிபதி ரமேஷ் தலைமையிலான பெஞ்ச் முன் குறிப்பிட்டு, ஆட்கொணர்வு மனுவின் முன்கூட்டிய விசாரணைக்கு கோரினார். கூடுதல் அரசு வழக்கறிஞர் ராஜ் திலக் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரிய நிலையில், செவ்வாயன்று ஆட்கொணர்வு மனுவை பட்டியலிட டிவிஷன் பெஞ்ச் ஒப்புக்கொண்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Supreme Court Chennai High Court Savukku Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment