தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருந்து வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்நிலையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதன்பிறகு, அவர் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முதல் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை மனு தாக்கல் செய்தார். அவரின் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட நிலையில், இறுதியில் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த சில நாட்களிலே செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வித்யா மற்றும் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கண்டனம்
இந்த வழக்கின் விசாரணை மார்ச் 25 அன்று நடைபெற்ற போது நீதிபதிகள், "செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை கேட்டு தெரிவிக்க கூறி இருந்தோம். ஆனால் அதனை அவரது தரப்பு முறையாக பின்பற்றவில்லை. அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
மேலும் கடந்த முறை நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கவில்லை, அதற்காக நீங்கள் அதனை அனுகூலமாக எடுத்துக்கொள்வீர்களா?. இது சரியான நடைமுறை அல்ல, இவ்வாறு தொடர்ச்சியாக காலம் தாழ்த்துவது ஒருவரின் நிலைப்பாட்டையே காட்டுகிறது. எனவே இந்த விவகாரத்தில் கால அவகாசம் வழங்க முடியாது" என்று கூறினர். மேலும், 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிட்டு, மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என்றும் நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்தனர்.
பதவியா? ஜாமீனா?
இந்த நிலையில், இன்று புதன்கிழமை இந்த வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், "ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா?" என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், "ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறியதன் காரணமாகவே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. சாட்சிகளை செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிகாரத்தை எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கவில்லை." என்றும் நீதிபதிகள் கூறியுள்ளார்.
தவிர, வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். அப்போது, இந்த விவகாரத்தில் முடிவெடுக்க அவகாசம் வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கேட்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் திங்கள்கிழமை வரை அவகாசம் கொடுத்துள்ளனர்.