scorecardresearch

கே.என் நேரு, ராமஜெயம் பற்றி பகீர் பேச்சு: சூர்யா சிவா மீது ஐ.ஜி- யிடம் தி.மு.க புகார்

திருச்சி சிவாவின் மகனும் தற்போது தமிழக பாஜக ஓ.பி.சி அணியின் மாநில செயலாளருமான சூர்யா சிவா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரை விமர்சனம் செய்து பேசியதோடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் மறைந்த தம்பி ராமஜெயம் குறித்தும் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

கே.என் நேரு, ராமஜெயம் பற்றி பகீர் பேச்சு: சூர்யா சிவா மீது ஐ.ஜி- யிடம் தி.மு.க புகார்

திருச்சி சிவாவின் மகனும் தற்போது தமிழக பாஜக ஓ.பி.சி அணியின் மாநில செயலாளருமான சூர்யா சிவா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரை விமர்சனம் செய்து பேசியதோடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் மறைந்த தம்பி ராமஜெயம் குறித்தும் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

மறைந்த தொழிலதிபர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது விசாரணையில் இருந்தாலும் குற்றவாளிகளை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. கொலை செய்தவரை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தரும் அளவிற்கு ராமஜெயம் தியாகி அல்ல என்றும் பேசியுள்ளார்.

மேலும் மறைந்த ராமஜெயம் அடாவடியானவர் என்றும் அவர்களுடைய வளர்ச்சியில் தான் தற்போது அமைச்சர் கே.என்.நேரு வாழ்ந்து வருகிறார் என்றும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

அதில் ஏற்கனவே தன்னிடம் பணியாற்றிய கார் ஓட்டுனருக்கு முறையான சம்பளம் வழங்காமல் அதை கேட்க சென்றவரை கொலை முயற்சி செய்ததாக வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டு இருந்தும் தற்போது மீண்டும் இப்படி சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டு இருப்பது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் நிலையாக இருக்கின்றது. எனவே, பாஜக பிரமுகர் சூர்யா சிவா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களைத் தொடர்ந்து சமூக நீதி பேரவை அமைப்பின் சார்பில் சூர்யா சிவா மத கலவரத்தை தூண்டும் விதமாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய பேச்சாலும் செயல்பாடுகளாலும் மற்றவர்களை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளதால் திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யா சிவா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது என்பதும், பாஜகவின் அரசியலுக்கு கைப்புள்ளையாக சூர்யா சிவா பயன்பட்டு வருகின்றார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி: க. சண்முகவடிவேல்  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Surya siva complaint ig

Best of Express