/tamil-ie/media/media_files/uploads/2022/10/police-1-3-2.jpg)
சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் இன்று (நவம்பர் 15) காலை முதல் மாநகரப் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மண்ணடி சைவ முத்தையா தெரு, சேவியர் தெரு, ஏழு கிணறு, கொடுங்கையூர், வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கொடுங்கையூர் பகுதியில் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மண்ணடி பகுதியில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெறுகிறது.
தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகம், ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் விசாரணை செய்யப்பட்டவர்கள் என 109 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உளவுத்துறை கொடுத்ததன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த வாரமும் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், ரூ. 56 லட்சம் பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் இன்று பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பாக சென்னை, கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள், மாநில காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.