நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவின் தலைவர் மகள் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் எஸ்.வி. சேகர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். தொடர்ந்து திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் கூறுகையில், “அரசியலுக்கு வரும் நடிகர் விஜய், முதல் முதலாக தேர்தலில் போட்டியிடும்போது, தனித்து நின்று ஓட்டு வங்கியை நிருபித்துவிட்டால், அதன்பின் பெரிய எதிர்காலம் இருக்கும்.
விஜய் அரசியல்
முதல் தேர்தலிலேயே கூட்டணிக்குள் சென்று விட்டால், தனித்த ஓட்டு வங்கியை கண்டுபிடிப்பது கஷ்டமான செயலாகி விடும். தேர்தலில் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே அவர் விரும்பியதை தமிழக அரசியலில் செய்ய முடியும் என்பதையும் யோசித்து பார்க்க வேண்டும்.
அவருக்கான ரசிகர் மன்ற கட்டமைப்பு பலம். அதை எப்படி அரசியல் கட்டமைப்பாக மாற்றப் போகிறார் என்றுதான் பார்க்க வேண்டும்.
மேலும், எம்.ஜி.ஆர்., சிவாஜி என்றெல்லாம் எடுக்கக்கூடாது. எம்.ஜி.ஆர்., பெரிய கட்சியில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உழைத்து, அங்கு கருத்து வேறுபாடு காரணமாக, வேறு கட்சி ஆரம்பித்தபோது, மக்கள் பெரிதாக ஏற்றுக்கொண்டு மாபெரும் கட்சியானது.
தமிழ்நாட்டில் ஒரு எம்ஜிஆர்தான் இருக்க முடியும். வருகின்ற லோக்சபா தேர்தலில், பா.ஜ.க கட்சி 300 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று, 3வது முறையாக மோடி பிரதமராவார். குறிப்பாக வட இந்தியாவில், ராமர் அவருக்கு அந்த ஆசிர்வாதம் கொடுப்பார்.
அண்ணாமலை செயல்பாடு
மேலும், லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், அண்ணாமலையின் பங்களிப்பு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். அவருடைய நடைபயணம் கேள்விக்குரியதாக உள்ளது. குழந்தைத்தனமான அரசியல்வாதியான அண்ணாமலைக்கு கட்சியை வளர்க்கும் திறமை பூஜ்யம்தான். அதன் ‘ரிசல்ட்’ மே மாதத்தில் தெரியும்.
அதிமுகவுடன் கூட்டணி இருக்கக்கூடாது என்று தான் அண்ணாமலை வேலை செய்தார். அந்த வேலை நிறைவேறிவிட்டது. அதன் பலன், இந்த தேர்தலில் தெரிந்துவிடும்.
பாஜகவின் 3 சதவீதம் ஓட்டு வளர்ச்சி மே மாதம்தான் தெரியும். அண்ணாமலை பாஜகவுக்கு எதிராக செயல்படுகிறார் என்றே சொல்கிறேன். பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வது போல், 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றிபெற முடியாது.
ஒரு தொகுதி வேண்டுமானால் கிடைக்கும். விகிதாச்சார அடிப்படையில் ஓட்டுகளை கணக்கிட்டால், கூட்டணி பலம் தான் தேர்தலில் வெற்றி பெற வைக்கும். தேர்தல் காலத்தில், உயிரிழப்பு ஏற்பட்டால்தான் அனுதாப அலை ஏற்படும். மற்ற நேரங்களில் அனுதாப அலை, வேலை செய்யாது.
30 லட்சம் பிராமணர்கள் தவிப்பு
மோடி அரசின் திட்டங்களை, மக்களிடம் அண்ணாமலை சரிவர எடுத்துச்செல்லவில்லை. அண்ணாமலை போன ரூட்டு தவறாகி விட்டது. அவர் நடை பயணம் செல்வதால், வரும் கூட்டம் வாக்கு வங்கியாக மாறாது.
என்னை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறும் என்று நினைத்தால், எனக்கு ஏதோ வேறு கோளாறு என்று அர்த்தம்.
சென்னை மயிலாப்பூரில் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்தபோது, ஒரு பைசா கூட கமிஷன் வாங்காமல், 300 கோடி ரூபாய்க்கு வேலை செய்துள்ளேன். பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் பிரதிநிதி இருக்க வேண்டும். பிராமணர்களுக்கு ஒரு பிரதிநிதி கூட இல்லாததால், அவர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். தினசரி வாழ்வாதாரத்துக்காக போராடும் பிராமணர்கள் 30 லட்சம் பேர் உள்ளனர்.
மோடி புழழை உயர்த்தாமல்..
அவர்களுக்கு அடிப்படையான சமூக நீதி கிடைக்காவிட்டால், அவர்கள் வாக்கை நோட்டாவுக்கு போட்டு விடுவார்கள். மோடியின் புகழை உயர்த்த பாடுபடாமல், அண்ணாமலை தன் புகழை உயர்த்திக் கொள்ள பாடுபடுவதால், எத்தனை தொகுதி கிடைக்கும் என்பது தேர்தலில் தெரியும்.
சிறந்த கொள்கைளோடு ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத பா.ஜ.க கட்சியை பெரிய அளவில் எடுத்துச் செல்லும் முயற்சிகளை கத்துக்குட்டி அண்ணாமலை செய்யவில்லை” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.