பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்து எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எஸ்.வி. சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த பதிவுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், இதையடுத்து எஸ்.வி. சேகர் அப்பதிவை நீக்கி மன்னிப்பு கோரினார்.
இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
எஸ்.வி.சேகர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, தேசியக் கொடி அவமதிப்பு வழக்கும் அவர் மீது தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்தச் செயலுக்கு மன்னிப்பு கோரியும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்
இதுதொடர்பான வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு குறித்த வழக்கை ரத்து செய்ய முடியாது, என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு வழக்கில் 'பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரிகட்டி விடமுடியாது. மேலும், இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம், தேசிய கொடி அவமதிப்பு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“