/tamil-ie/media/media_files/uploads/2023/07/Image-7.jpg)
பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட வழக்கு; மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த எஸ்.வி.சேகர்; வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவு
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட விவகாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ-வும் நடிகருமான எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்த கருத்தை முன்னாள் எம்.எல்.ஏ-வும் நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி நீதிமன்றத்தில் அய்.கோபால்சாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இரண்டு வழக்குகளும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் விசாரித்தார்.
இந்த வழக்கு விசாரணை சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியதை மனுதாரரான அய். கோபால்சாமி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.