செஞ்சி அருகே அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்பு பெண் சாமியாடிபடி ரோடு போட கோரிக்கை வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
Tamil Nadu Welfare Minister Gingee K.S. Masthan Tamil News: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆர்.நயம்பாடி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, பூமி பூஜை போட்டு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
Advertisment
இதற்கிடையில், பூமி பூஜை நடக்கும் இடத்திற்கு வந்திருந்த பெண் ஒருவர், திடீரென சாமி ஆடினார். இதை பார்த்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், அந்த பெண்ணிடம் என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது அவர், தான் கன்னிமார் சாமி என்றும், அந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரோடு போட்டு தர வேண்டும் என்றும் சாமி ஆடியபடியே அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
சாமி ஆடிய பெண்ணிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், 'ரோடு போட்டு கொடுக்கிறேன், அதற்கான வழிவிடமாட்டேன் என்று சொல்கிறவர்கள் மனதில் போய், நீ வழிவிடுவதற்கு சொல், ரோடு போட்டுத்தருகிறேன்.' என்றார்.
Advertisment
Advertisements
அதை 'நீ தான் முடிவு செய்ய வேண்டும்.' என சாமி ஆடிய பெண் அமைச்சரிடம் கூறுகிறார். பின்னர் அமைச்சர், 'நான் முடிவு செய்கிறேன், நீ கூடவே இரு. நீ ஊரை பாதுகாத்துக்கோ' என்று கூறி அந்த பெண்ணுக்கு லட்டு ஒன்றை கொடுத்தார்.
மேலும், கன்னிமார் சாமிக்கு தானும் பாட்டுப்பாடி, கரகம் தூக்கி கூழ் ஊற்றவும் செய்து இருக்கிறேன் என்றும், அதனால் தான், எனது சொந்த இடத்தை மலைவாழ் மக்களுக்காக கொடுத்தேன். அவர்களும் அங்குள்ள சாமியை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள் என்று கூறி அந்த பெண்ணை அமைதியடைய செய்தார்' அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
இதன்பிறகு அமைச்சரிடம் பேசிய சாமி ஆடிய பெண், 'சரி நீ எனது கோரிக்கையை செய்து கொடுத்துவிடு' என்கிறார். அதற்கு அமைச்சர், '100 சதவீதம் செய்து தருகிறேன், நீ கூடவே இரு, அதற்காக தான் இனிப்பு கொடுத்துள்ளேன்.' என்று கூறுகிறார்.
இப்படியாக அந்த உரையாடல் நடந்த நிலையில், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil