தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறபித்த உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை வந்தது.
இந்நிலையில் அரசுத் தரப்பில் தென்காசி மாவட்டங்களில் ஆயிரம் ஹெக்டேர் பரப்புக்கு மேலும், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 500 ஹெக்டேர் பரப்புக்கு மேலும், சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமை கருவேல மரங்கள் அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால்தான் அவை மீண்டும் வளராமல் தடுக்க முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக குழுக்கள் அமைக்க பிறபித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது என அரசு கொள்கை முடிவு எடுத்த போதும், இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அமல்படுத்தவில்லை என்பதால் உண்மையில் மரங்களை அப்புறப்படுத்துவதில் அரசுக்கு ஆர்வம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில் குழுக்கள் அமைத்தது குறித்து ஜூலை 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“