கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் வரும் சூழல் எட்டி உள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை15) மாலை 4.00 மணியளவில் 115.730 அடியை எட்டியது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை அதாவது 120 அடியை எட்டும் என்றும், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் அப்படியே திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
எனவே, காவிரி கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்து கொள்ளுமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
காவிரி நீர் நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்குவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ ”செல்ஃபி” (Selfie) எடுக்க அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.