அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று சென்னையில் ஏற்ப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து பேசிய கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்த நிலையில், கடந்த வாரம், சென்னையில் பல பகுதிகளில் 48 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்தது. பல பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது
தற்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவையான பால் மற்றும் உணவு பொருட்களின் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேவையான முக்கிய உணவாக இருக்கும் பாலின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பலரும் கடுமையாக சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கடந்த 40 ஆண்டுகளாக நாங்கள் செய்துகொண்டிருந்த வேலைகளை இப்போது கேமரா முன்பு செய்து கொண்டிருக்கிறோம். இத்தனை நாட்கள் வந்தது எல்லாம் சிற்றிடராகத்தான் இருந்தது. ஆனால் இப்போது வந்திருப்பது பேரிடர் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான பாதிப்பு இங்கே இருக்கிறது.
இப்போது நாம் குறை சொல்லிக்கொண்டிருப்பதை விட இறங்கி வேலை செய்வது நம் கடமை. அனைவரின் கடமை. அப்படித்தான் நாங்கள் இருந்திருக்கிறோம். எப்போதும் அப்படித்தான் இருப்போம். கொரோனா காலக்கட்டத்தில் கூட நோயாளிகளுக்கு எனது வீட்டை கொடுக்க நான் தயாராக இருந்தேன். ஆனால் அப்போது எனக்கு கிடைத்த பதில், கொரோனா நோய் தொற்று இருக்கும் வீடு என்று நோட்டீஸ் ஒட்டிவிட்டார்கள்.
இந்த மாதிரியான செயல்கள் எங்களுக்கு புதிது அல்ல. 40 வருடத்திற்கு முன்பு நாங்கள் பெயர் தெரியாத சிறு கூட்டமாக இருந்தபோது, எங்களுக்கு பெரிய தொந்தரவு இருந்தது. இந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு உதவுவது என்று எடுத்துக்கொண்டால், அரசை விமர்சிப்பது நாம் அப்புறம் செய்யலாம். அது செய்ய வேண்டிய ஒன்று தான். வல்லுணர்களுடன் அமர்ந்து பேசி, இந்த நிகழ்வுகளில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி, இதன் நீண்டகால திட்டங்கள் என்ன? தீர்வுகள் என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். இது க்ளைமெட் சேஞ்ச் என்று உலகம் முழுவதும் நடக்கும் ஒரு நிகழ்வு.
இதற்காக குறை சொல்வதை விட்டுவிட்டு, குறைகளை பின்னர் சொல்லிக்கொள்ளலாம். முதலில் மக்களுக்கு தேவையான என்ன? ஒரு அரசு இயந்திரம் ஒரு கோடி மக்களை உடனே சென்றடைவது சாத்தியமில்லை. அதனால் நாமும் நமக்கு தேவையான முன்னேற்பாடுடன் நமக்கு நாம் உதவி செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அந்த பொறுப்பு எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“