தமிழ்நாட்டில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது முதல் மாநாட்டை நடத்த உள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு அழைப்பு வந்தாலும் வராவிட்டாலும் நான் கலந்துகொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தீவிர அரசியலில் களமிறங்க உள்ள அவர், தனது கட்சி 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்றும், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, திரைத்துறையில் இருந்து தான் விலக உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
தற்போது தனது 69-வது படத்தின் பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரும் அக்டோபர் 27-ந் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு காவல்துறை இந்த மாநாட்டுக்காக அனுமதி வழங்கியுள்ளது. இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சி கொடியின் அர்த்தத்தையும், கட்சியின் கொள்கை குறித்தும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த மாநாட்டில் முக்கிய பிரபலங்கள் அல்லது சினிமா நட்சத்திரங்கள் யாரேனும் கலந்துகொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு அழைப்பு வந்தாலும் வராவிட்டாலும் நான் கலந்துகொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், நானும் ஒரு வாக்காளர் தான். ஒரு வாக்காளராக அவர் என்ன சொல்லப்போகிறார் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார், இப்போது இதுக்கும் அரசியல்வாதிகளை விட, இவர் என்ன நல்லது செய்யப்போகிறார் என்பதை, மக்களோடு மக்களாக நின்று நானும் பார்ப்பேன். இதற்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநாடு நடக்கும்போது எங்காவது ஓரமான நின்று வேடிக்கை பார்க்க வேண்டியது தான். நாம ஓட்டு போடுகிறோம். புது அரசியல்வாதி வருகிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பார்க்க வேண்டும் அல்லவா. அதை டிவியில் எதற்காக பார்க்க வேண்டும். நேரில் பார்த்தால் நல்லா இருக்கும்.
த.வெ.க கட்சியில் இணைவது குறித்து இப்போதைக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. கட்சி முதலில் மாநாடு நடத்தட்டும். அவர் என்ன சொல்லப்போகிறார். என்ன பண்ணப்போகிறார் என்பதை முதலில் பார்ப்போம். அவர் முதல் அடி வைக்கட்டும். அவரது செயல்பாடு என்ன என்று பார்ப்போம் . 2026 தேர்தலுக்கு இன்றும் நிறைய நேரம் இருக்கிறது. கட்சியில் இணைவேன் என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. ஆனால் எனக்கு பிடித்த அரசியல்வாதிக்கு நான் ஓட்டு போடுவேன். சொல்ல முடியாது வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கலாம். நான் இப்போதும் அரசியல்வாதிதான். யார் எல்லாம் சமூக சேவை செய்கிறார்களே அவர்கள் அனைவருமே அரசியல்வாதிகள் தான் என்று விஷால் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil