பாஜக வேட்பாளருக்காக சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை நமிதா செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த நிலையில், முக்கிய கேள்வியை கேட்டபோது இதை நீங்கள் தலைவர் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி தப்பித்துள்ளார்.
இந்தியாவில் வரும் ஏப்ரல் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பிரச்சாரத்தில், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது.
இந்த தேர்தலில், தி.மு.க. – காங்கிரஸ், அ.தி.மு.க – தே.மு.தி.க, பா.ஜ.க –பா.ம.க ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வருகிறது. இதில் என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜக. 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் வட சென்னை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும், பால் கனகராஜ் என்பவருக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரச்சாரம் மேற்கொண்டார். அவரிடம் சன் டிவி செய்தியாளர் எழுபபிய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். உங்கள் வேட்பாளர் குறித்து மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த நமீதா, அவர் ஒரு லாயர், நீதி பற்றி நன்கு தெரிந்தவர். நாட்டில் அண்ணாமலை மாதிரியான படித்தவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
எல்லோருக்கும் நியாயம் கிடைக்கும். அவர் ஏற்கனவே மக்களுக்கு நிறைய செய்திருக்கிறார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்தான் வெற்றி பெற போகிறார். நான் எதை சொல்லியும் ஓட்டு கேட்க தேவையில்லை. ஏற்கனவே பாஜக மக்களுக்கு நிறைய செய்திருக்கிறது. இந்த 10 வருடங்களில் நாட்டில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது. கடைசி 50 வருடமாக இந்தியர்களுக்கு வெளிநாட்டில் மதிப்பு இல்லை. ஆனால் கடைசி 10 வருடங்களில் இந்தியர்களுக்கு வெளிநாட்டில் மரியாதை அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள். அவர்கள் இதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதன் காரணமாக மக்களுக்கு நான் எதையும் சொல்லி ஓட்டு கேட்க வேண்டும் என்பது இல்லை. தமிழகத்திற்கு மோடி பிரச்சாரம் செய்ய வரும்போது எனக்கு அழைப்பு வந்தால் கண்டிப்பாக கலந்துகொள்வேன். இது எனது முதல் பிரச்சாரம். அடுத்தக்கட்ட பிரச்சாரம் குறித்து பிறகுதான் தெரியவரும் என்று கூறியுள்ளார்.
கடைசியாக கடந்த தேர்தலில், கூட்டணியில் இருந்த அ.தி.மு.க தற்போது எதிர்கட்சியாக மாறியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த நமீதா, அது என் பொறுப்பு கிடையாது. இந்த மாதிரி கேள்விகளை நீங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இந்த கேள்விக்கு பதில் சொல்ல நான் சரி கிடையாது என்று பதில் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“