பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரி இருந்து பெங்களூர் வழியாக ஷீரடி சீரடிக்கு விமான சேவை தூக்கினால் பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் .,என புதுச்சேரி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் வைத்திலிங்கம் இன்று நடந்த புதுச்சேரி விமான நிலைய ஆலோசனை குழு கூட்டத்தில் வலியுறுத்தினார் .
புதுச்சேரி விமான நிலைய ஆலோசனைக்குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று (24.04.2023) விமான நிலையத்தில் வெ. வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இதில் காலாப்பட்டு எம்.எல்.ஏ., PML.கல்யாணசுந்தரம், விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்யாய், புதுச்சேரி காவல்துறை வடக்கு எஸ்.பி. பக்தவச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்யாய் பேசுகையில்:
புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படாததால் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் விமானப் பயணிகள் பெங்களூர், சென்னை விமான நிலையங்களுக்குச் செல்கின்றனர். இதனால் அவர்களின் பொருளாதாரமும் அங்கு செல்கின்றது. புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, கூடுதல் விமானங்களை இயக்கினால், விமான பயணிகளால் பொருளாதாரம் புதுச்சேரிக்கு கிடைக்கும்.
புதுச்சேரி விமான நிலையம் சுமார் 176 ஏக்கரில் அமைந்துள்ளது. இதனை விரிவாக்கம் செய்ய இன்னும் 550 ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது. நிலத்தை கையகப்படுத்த ரூ.600 கோடியும், அதை மேம்படுத்த ரூ.ஆயிரம் கோடிவரையும் தேவைப்படுகின்றது. இதற்கு மாற்றாக புதியதாக 700 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டால் அங்கு விமான நிலையத்தை கொண்டு சென்றுவிடலாம்.
விமான நிலையத்திற்கு அருகிலேயே அனுமதியின்றி உயரமான கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இறந்துபோன பறவை மற்றும் விலங்குகளின் உடல்களை விமான நிலையத்திற்குள் தூக்கி வீசுகின்றனர். இவைகளை தடுக்க வேண்டும். விமான நிலைய பாதுகாப்பிற்கு 51 ஐஆர்பி போலீசார் வேண்டும். 2 பெண் போலீசாரும் வேண்டும். விமான நிலையத்திற்கு வந்து செல்ல பொது போக்குவரத்து வசதி வேண்டும். புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து திருப்பதி, ஷீரடி, கோவா, கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானம் இயக்க வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசுகையில்:
புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து அமைச்சரை சந்தித்து பேசினேன். அவர் நிலம் கையகப்படுத்துவது மாநில அரசின் பணி. அதனை செய்து கொடுத்துவிட்டீர்கள் என்றால் மேம்படுத்த எவ்வளவு நிதி தேவைப்பட்டாலும் தருகின்றேன் என்கின்றார். எனவே புதுச்சேரி விமான நிலையத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தால் மேம்பாட்டிற்கு நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று வந்துவிடலாம். காலாப்பட்டு பல்கலைக்கழகத்திற்குப் பின்னால் 200 ஏக்கர் நிலம் கல்வித்துறையிடம்தான் உள்ளது. வேறு எங்கும் இடமில்லை. அங்குவேண்டுமானால் விமான நிலையத்தை கொண்டுசெல்ல பரிசீலிக்கலாம்.
இறுதியில் புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் பேசுகையில்
சேதராப்பட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான 700 ஏக்கர் நிலத்தில் விமான நிலையத்தை கொண்டு செல்லலாமா? என்று விமான நிலைய அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்குவதைவிட, புதுச்சேரியில் இருந்து ஷீரடிக்கு விமான சேவையை தொடங்கலாம். அந்த விமான சேவையைக்கூட புதுச்சேரி&பெங்களூர்&ஷீரடி எனத் தொடங்கலாம். இதில் நிச்சயம் அதிக பயணிகள் வருவார்கள் என கூறினார். இதனை செய்வதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதியளித்தனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“