அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு செல்ல உதயநிதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தேமுதிக பொதுச்செயவாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் உடல்நிலை தேறி வீடு திரும்பினார். விஜயகாந்த் வீடு திரும்பிய அடுத்த நாள் தேமுதிக பொருளாளராக இருந்த பிரேமலதா விஜயகாந்த், தற்போது பொதுச்செயலாளராக புதிய பதவி ஏற்றுள்ளார்.
இதனிடையே தேமுதிக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரேமலாதாவுக்கு அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு செல்லும்போது ரெனிவேஷன் வேலை நடைபெறுவதால், அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அங்கு வேலை நடக்கிறது என்று சொன்னதால் இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று நினைத்து ஒதுங்கிவிட்டோம். அப்போது செய்தியாளர்கள் 20 நாட்கள் முன்பு உதயநிதி பிறந்த நாளில் அங்கு வந்தார் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. உங்களுக்கு ஏன் அனுமதி இல்லை எ்ன்று கேட்கிறர்கள்.
அவர்கள் கட்சி அவர்கள் ஆட்சி அவர்கள் பேரன் நான் ஒன்றும் கலைஞர் பேத்தி இல்லையே. ஒருவேளை நான் கலைஞர் பேத்தியாக இருந்திருந்தால் எனக்கு அனுமதி அளித்திருக்கலாம். ஆனால் இப்போது அவர் கலைஞர் பேரன் என்பதால் அவரை விடுகிறார்கள். தலைவர்களுக்கு மரியாதை செலுத்த தான் போனோம் ஒரு 5 நிமிடம் தான். எல்லோரையும் இல்லை ஒரு 5 பேரை மட்டுமாவது விடுங்கள் என்று சொன்னோம். அதற்கும் அனுமதிக்கவில்லை. ஜனநாயகத்தின் குரல் வலை நெரிக்கப்படுகிறது.
அதன்பிறகு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா, காமராஜர், அம்பேத்கர் பெரியார் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்தோம் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil