தமிழகத்தில் பல பல்கலை கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டியதுள்ளது. துணை வேந்தர் நியமனம் என்பது கவர்னர் பெயரில் வந்தாலும், ஆளும் கட்சி சார்பில் அனுப்பப்படும் பட்டியலில் ஒருவரையே கவர்னர் தேர்ந்தெடுப்பார். எனவே ஆளும் கட்சி அமைச்சர்களையோ, அல்லது பவர் செண்டர்களையோ கல்வியாளர்கள் தேடி ஓடுவார்கள்.
ஆனால் தமிழகத்தில் தற்போது நிலைமையே வேறாக இருக்கிறதே. அதுவும் பாரதியார் பல்கலை கழக துணை வேந்தர் கைது செய்யப்பட்ட பின்னர், துணை வேந்தர் நியமனம் தாமதமாகிறது. யாரை நியமித்தாலும் பிரச்னை வரும் என்பதால், உயர் கல்வி துறை அமைச்சரும் ரொம்பவே தயங்குகிறார்.
பல்கலை கழக துணை வேந்தர்கள், பதிவாளர்களை அழைத்து கவர்னரே பேசுகிறார். துணை வேந்தர் பதவிக்கு கவர்னரே நேர்முக தேர்வு நடத்துகிறார். இதனால், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக பிரமுகர்களை பிடிக்க கல்வியாளர்கள் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
சென்னை அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் பதவி ஓராண்டாக காலியாக இருக்கிறது. பிளஸ்டூ தேர்வு ஆரம்பமாகிவிட்டது. என்ஜினியரிங் அட்மிஷன் போது துணை வேந்தர் இருக்க வேண்டியது அவசியம் என்பதால், துணை வேந்தர் தேர்வு துரிதமாகி இருக்கிறதாம்.
முன்னாள் துணை வேந்தர் ராஜாராம், பேராசிரியர்கள் கீதா, தாமரை செல்வி என மூன்று பெயர்கள் இறுதி பட்டியலில் இருக்கிறதாம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மத்தியில் 2வது இடத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவர், பொன்னான ஒருவர், இந்தியாவின் 2வது குடிமகன் ஆகியோர் பரிந்துரை செய்திருக்கிறார்களாம். கவர்னர் யாருக்கு டிக் அடிப்பாரோ?