ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க சுயேட்சை எம்.எல்.ஏ. தரப்பு தீவிரமாக இருக்கிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்துக்கு முன்பாகவே தங்கள் பக்கம் எம்.எல்.ஏ.க்களை கொண்டு வர தீவிர முயற்சியில் இருக்கிறார்கள்.
மன்னார்குடி குடும்பத்தின் முதல்வர் கனவு, கானல் நீராகிப் போனது. குறைந்தபட்சம் முன்பு போல பேக் சீட் டிரைவிங்காவது செய்யலாம் என்றால், அவர்களிடம் கை கட்டி நின்றவரே, அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கியிருங்கள் என்று சொல்லி, இப்போது மன்னார்குடி குடும்பத்தை தள்ளி வைத்துவிட்டார்.
சுயேட்சை எம்.எல்.ஏ.வை நம்பி வந்த 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை பறித்தாலும், நீதி மன்ற தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாகவே வரும் என்ற செய்தியை தீவிரமாக பரப்பி வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறதாம். அதாவது தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வரும் என்றால் ஆளும் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்களாம்.
எனவே எம்.எல்.ஏ.க்களை பிடிக்கும் பணியை முன்னாள் அமைச்சர்கள் இருவரிடம் ஒப்படைத்துள்ளார்களாம். அவர்கள் இருவருமே எம்.எல்.ஏ. பதவியை இழந்து நிற்பவர்கள்தான். அவர்கள் எம்.எல்.ஏ.க்களிடம் பெரிய 15 நோட்டை தருவதாக ஆசை காட்டுகிறார்களாம். தீர்ப்புக்கு முன்னால் வந்தால்தான் இந்த பணமாம். இந்த பேரத்தில் வீழ்ந்தவர்தான் சமீபத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ.வை சந்தித்தாராம்.
தீர்ப்புக்கு பின்னர் வந்தால், பெரிய அளவின் பண பலன் கிடைக்காது என்றும் பேரம் பேசுகிறார்களாம். இதனால் கோட்டையில் ஓட்டை விழுந்துவிடக் கூடாது என்பதால், ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் போன்கள் முழுசாக ஒட்டுக்கேட்கப்படுகிறதாம்.