தமிழ் மொழியின் உணர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் 9 வயது சிறுவன் 63 நாயன்மார்களின் வரலாற்றை 63 நிமிடங்களில் விளக்க உரை ஆற்றி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பிரசன்னகுமார், நளினி தம்பதியினரின் 9 வயது மகன் பவேஷ், 5-ம் வகுப்பு பயிலும் இந்த சிறுவன், சிறுவயதில் இருந்து தமிழ் மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். சிறுவனின் ஆர்வத்தை கண்ட பெற்றோர்கள் அவருக்கு தமிழ் மீதான பயிற்சிகளை வழங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவன் பவேஷ் தமிழ் மொழியின் உணர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 63 நாயன்மார்களின் வரலாற்றை 63 நிமிடங்களில் பொதுமக்கள் முன்பு தனி தனியாக விளக்கவுரையாற்றி பிரமிக்க வைத்தார். சிறுவனின் இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழ்களை நோபல் புத்தகத்தின் இயக்குனர் ஹேமலதா மற்றும் காவல் ஆய்வாளர் மீனாகுமாரி ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“