தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும்,நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்.
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2 மாதமாக சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மறைவேய்தினார்.
மறைந்த ஞானதேசிகன் 2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இணைந்தவர்.
ஞானதேசிகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல் குறிப்புகளை பதிவு செய்து வருகின்றன்ர.
ஜி. கே வாசன் இதய அஞ்சலி: நமது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத்தலைவர் B.S ஞானதேசிகன் Ex MP அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்கள். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், தமாக கட்சித் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்தார்.
தற்போதைய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இளமைப் பருவம் முதல் பெருந்தலைவர் காமராஜர் மீது பற்றுகொண்டு மாணவர் காங்கிரஸில் தம்மை இணைத்துக்கொண்டவர். அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜீவ் காந்தி, அன்னை சோனியா காந்தி ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவர். மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று அவரது தலைமையில் தீவிரமான அரசியல் பணிகளை மேற்கொண்டவர். சிறந்த வழக்கறிஞர். பழகுவதற்கு இனிய பண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த திரு பி.எஸ்.ஞானதேசிகன் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு பி.எஸ்.ஞானதேசிகன் அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இயக்க நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் ” என்று தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது இரங்கல் குறிப்பில், ” தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும்,நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு.பி.எஸ்.ஞானதேசிகன் அவர்கள் காலமானார் என்ற செய்திஅறிந்து வருத்தமடைந்தேன்.அன்னாரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தனது இரங்கல் குறிப்பில், ” எங்களின் மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ஞானதேசிகன் அவர்கள் மறைவு பேரிழப்பாகும். சமரசமில்லாத தேசியவாதி,
அன்பாலும், கருணையாலும் ஆயிரக்கணக்கான நபர்களை ஈர்த்தவர். என் வழக்கறிஞர் பணியில் அவர் கொடுத்த சுதந்திரமும், வாய்ப்புகளும் ,தன்னம்பிக்கையும்
நான் உயர முக்கிய காரணமானது” என்று தெரிவித்தார்.
தமாகவின் துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைந்த செய்தி அறிந்து துயரமடைந்தேன் அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் தமாக தலைவர் வாசன் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அக்கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook