12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி, 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அனைத்து பாடத்திலும் சாதம் வாங்கிய மாணவி நந்தினி, வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ்- 2 தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 7,55,451 ஆகவும், தேர்வெழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 94.03% பதிவாகியுள்ளது.
மாணவியர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 4,05,753, தேர்ச்சி சதவீதம் 96.38 % ஆகவும் பதிவாகியுள்ளது.
இதில், மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 3,49,697 ஆகவும், தேர்ச்சி சதவீதம் 91.45% ஆகவும் பதிவாகியுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பிளஸ்- 2 தேர்வில் திண்டுக்கல் அண்ணாமலையார் அரசு உதவி பெரும் பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி, 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்று என்று 6 பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை குறித்து மாணவி நந்தினி கூறுகையில், “இவ்வளவு மதிப்பெண் எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று அனைவரும் எனக்கு ஊக்கம் அளித்தனர். படிப்பு மட்டும் சொத்து என்று கூறி தான் பெற்றோர்கள் என்னை வளர்த்தார்கள். படிப்பதுதான் எனது சொத்து என்று நினைத்து படித்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு மதிப்பெண்கள் கிடைத்துள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விசாகன் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார். அதேபோல திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் மாணவியை அழைத்துப் பாராட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil