2020ம் ஆண்டு மருத்துவ படிப்புகளில், தமிழகத்துக்கு கூடுதலாக 400 எம்.பி.பி.எஸ் இடங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிப்பது, தமிழகத்தில் இயங்கும் சில சுயநிதி கல்லூரிக்கு எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தை தொடங்க அனுமதிப்பது தொடர்பான கோரிக்கைகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது .
இதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்கள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள துவக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக இது விளங்குகிறது. தகுதியான மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதினால், இந்த மருத்துவமனையில் மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு முதல் 150 மாணவர்களுடன், எம்.பி.பி.எஸ் படிப்பை தொடங்க, பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது.
மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம், சவீதா மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு மருத்துவமனை கல்லூரிகளில் தலா 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
முன்னதாக, செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய நிதியுதவியுடன் கூடிய திட்டங்களின் மூன்றாம் கட்டமாக, தற்போதுள்ள மாவட்ட / பரிந்துரை மருத்துவ மனைகளில் 2021-22-க்குள் கூடுதலாக 75 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் கூடுதலாக 15,700 எம்.பி.பி.எஸ் இடங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
இதில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
இந்த புதிய 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் 2021-22 கல்வியாண்டில் தமிழகத்தில் கூடுதலாக 1,650 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது, 3,250 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள மாவட்ட / பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதன் மூலம், தகுதியான மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதோடு, அரசு மருத்துவமனைகளில் மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும் மாவட்ட மருத்துவமனைகளில் தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகைள பயன்படுத்தி, நாட்டில் மருத்துவக் கல்வி குறைந்த செலவில் கிடைக்கவும் வழிவகை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil