/indian-express-tamil/media/media_files/F7GZimMWSaqguR9fwdUs.jpg)
ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய அதிகாரி கைது; திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை
திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தங்கையன் மகன் அந்தோணி. இவர் புதிய வீடுகள் மற்றும் பழைய வீடுகளில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை காண்ட்ரெக்ட் முறையில் எடுத்து செய்து வருகின்றார்.
அந்தவகையில், திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டு அதற்கான வேலைகளை செய்து வந்தபோது, அந்த வீட்டிற்கு முன்பு உயர் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்த கம்பத்தை சற்று தள்ளிப் போடுவதற்கு கிராப்பட்டியில் உள்ள உதவி செயற் பொறியாளர், இயக்கலும் காத்தலும், மின் பகிர்மான மற்றும் உற்பத்தி கழகம் அலுவலகத்தை அணுகி அங்கிருந்த வணிக உதவியாளர் அன்பழகன் என்பவரை நேரில் சந்தித்து மனு செய்தார்.
அந்த மனுவின் அடிப்படையில், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர் சம்மந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டு எஸ்டிமேட் தயார் செய்து கொடுத்துவிட்டு, போஸ்ட்டை இடம் மாற்றுவதற்கு ரூ.35 ஆயிரம் ஆன்லைனில் கட்டணம் செலுத்துமாறு அந்தோணியிடம் கூறியுள்ளார்.
அதன் பேரில் அந்தோணி உயிர் மின்னழுத்த கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு ரூ.35 ஆயிரம் கட்டணத்தை ஆன்லைன் மூலம் கடந்த 15-4-2024 அன்று செலுத்திவிட்டு அதன் ரசீதினை, எடுத்துக் கொண்டு வணிக உதவியாளர் அன்பழகன் இடம் கொடுத்துள்ளார். அதற்கு அன்பழகன் ஒரு மாதம் கழித்து தன்னை வந்து பார்க்குமாறு கூறியுள்ளார்.
அதன் பேரில் அந்தோணி நேற்று (27-5-24) காலை சுமார் 11.30 மணி அளவில் மேற்படி அன்பழகனை கிராப்பட்டியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து மின் கம்பம் மாற்றம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அன்பழகனோ, உங்க வேலையை முடிக்க வேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் பட்சத்தில் உடனடியாக கம்பத்தை மாற்றி அமைத்துக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். அதற்கு அந்தோணி தன்னால் அவ்வளவு தொகை தர இயலாது என்று கூறியதன் பேரில் அன்பழகன் ஐயாயிரம் குறைத்துக் கொண்டு, ரூ.15 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே உங்களது வேலையை செய்து தர முடியும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை வந்து காவல்துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் என்பவரை சந்தித்து நடந்தவற்றைக்கூறி புகார் மனு அளித்தார். அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இன்று (28.5.2024) காலை 11 மணியளவில் அந்தோணி, மின்வாரிய வணிக உதவியாளர் அன்பழகன் வசம் லஞ்சமாக ரூ.15 ஆயிரத்தை கொடுத்தார்.
அன்பழகன் லஞ்சம் பெற்றபோது திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிராப்பட்டி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் லஞ்ச வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.