சட்டப்பேரவை மிகப்பெரிய மாண்பும், மதிப்பும் கொண்டது. அதை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக் கூடாது என்று பா.ஜ.க சட்டமன்றக் கட்சிக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பின்னர் முதல்வர் கொண்டுவந்த அரசின் தனி தீர்மானத்தை ஏற்க மறுத்து பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அதேநேரம் பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தது.
விவாதத்தின்போது பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், "சட்டமன்றம் மிகப்பெரிய மாண்பும், மரபும் மிக்கது. இதனை பொதுக்கூட்ட மேடையாக மாற்றி விடக்கூடாது. கருத்து வேறுபாடு பல இருக்கலாம். நிதானம் தவறிய சொற்களை இங்கு நிறைய பேர் பேசியுள்ளனர். பா.ஜ.க அரசாங்கம், கவர்னர் என்று பேச வேண்டிய அவசியம் இல்லை. வேந்தர்களை நியமனம் செய்வதில் ஆளுநர்களுக்குத்தான் அதிகாரம் வேண்டும் என்று, இதே சபையில் கலைஞர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், இன்று, தீர்மானம் வேறுவிதமாக இருக்கிறது. இது சட்டமன்றத்துக்கு முரண்பாடாக இருப்பதாக நான் கருதுகிறேன். துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்று அரசியல் சாசனமே சொல்கிறது" என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ”அப்போதெல்லாம் ஆளுநர் அரசுடன் பேசிதான், துணைவேந்தர்களை நியமிப்பார். ஆனால் இப்போது அப்படியல்ல. அதனால்தான் இதை தற்போது கடுமையாக எதிர்க்கிறோம்” என்று கூறினார்.
இதைக்கேட்ட நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பேசும்போது, "எமர்ஜென்சி காலக்கட்டத்தில் கல்வி மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் தான் மத்திய அரசு கல்விக் கொள்கைக்கு தரப்படுகிறது. அந்த வகையில் பொது பட்டியலில் இருக்கும், உயர்கல்வி நுழைவுத்தேர்வுகள், வேந்தர்கள் நியமனம் என அனைத்துமே மத்திய அரசு வசமே உள்ளது. அதனை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முனைந்திருக்கிறார். வேந்தர் பதவி அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றமே சொல்கிறது. இப்படியான சூழலில் ஆளுநரிடம் இருந்து அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் எதற்கு திருப்பி அனுப்பப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து, அதற்கு தந்தாற்போல சட்டங்களை மாற்றி அமைத்து, நாம் அதை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே பா.ஜ.கவின் வேண்டுகோளாக உள்ளது, என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
அதன் பிறகு முதல்வர் கொண்டு வந்த அரசின் தனி தீர்மானத்தை ஏற்க மறுத்து பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “கல்வி மாநில அரசின் பட்டியலிலும் இல்லை, மத்திய அரசின் பட்டியலிலும் இல்லை. அது பொதுப்பட்டியலில் உள்ளது. தி.மு.க அரசு தனது செல்வாக்கை இழந்து கொண்டே இருக்கிறது. மக்களுக்கான பிரச்சினைகள் நிறைய உள்ளன. அதை மறைக்கத்தான் தி.மு.க அரசு ஆளுநர் விஷயத்தை கையில் எடுத்திருக்கிறது. மின் கட்டணம் அதிகரித்துள்ளது. மின் கட்டண உயர்வை கேட்டு
, ஷாக் அடித்தே பலர் இறந்து விடுவார்கள் போலிருக்கிறது. வீட்டு வரி அதிக அளவில் கூடியிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வரும்போது பட்டியலின மக்கள் மீது தாக்குதல் அதிகமாக நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் மறைப்பதற்காக ஆளுநரைப் பற்றி பேசி வருகிறார்கள். ஆளுநரைப் பற்ற்றியும் மத்திய அரசைப் பற்றியும் உறுப்பினர்களைப் பேசவிட்டு அவை வேடிக்கை பார்க்கிறது. இது வேதனையானது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“