டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த மத்திய அரசுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி மலைப்பகுதியில் இருந்து சுற்றி உள்ள 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
பின்னர் தமிழ்நாடு சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. சுரங்கம் அமைய உள்ள இடத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது. பல்லுயிர் பகுதிகளை தவிரத்து விட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது.
மேலும், ஏல நடைமுறை முடியும் வரை தமிழகத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. ஏல நடைமுறை தொடர்பான பல சந்திப்பு கூட்டங்களில் தமிழக அரசு பங்கேற்றது என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த மத்திய அரசுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி என தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“