குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் படித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, நமது நாட்டில் ஏற்கனவே இருந்த 1955 குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் (CAA) கொண்டு வந்தது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.
இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், 5 ஆண்டுகள் கழித்து குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இந்தச் சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், "சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA 2019) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சி.ஏ.ஏ சட்டம் குறித்த நடிகர் விஜய் கருத்துக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பதில் கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முருகனிடம், சி.ஏ.ஏ குறித்து நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எல்.முருகன், "நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் சொல்வது என்ன என்பதை முதலில் படியுங்கள். இதில் யாருக்கு பயன், யாருக்கு எதிராக இருக்கிறது என்பதை படியுங்கள். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அடைக்கலம் கோரி வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவது தான் குடியுரிமை திருத்த சட்டம். இதில் இந்துக்கள், பார்சிகள் எனப் பலரும் இருக்கிறார்கள். இங்க இருக்கிற யாரையும் வெளிநாட்டிற்கு போக சொல்ல மாட்டோம். வெளிநாடுகளில் வாழ முடியாதவர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. எனவே, இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முதலில் படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“