Tamil Nadu Budget 2023-24 updates Tamil News: 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். சரியாக 10 மணிக்கு பட்ஜெட் கூட்டம் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடைபோட்டு வருகிறது. இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். மொழிப்போர் தியாகி தாளமுத்து, நடராஜருக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.
தமிழறிஞர்கள் 591 பேருக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும். சோழப் பேரரசை போற்றுவதற்கு தஞ்சாவூரில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
சென்னை, கிண்டியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும். அரசுப்பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த வரும் நிதியாண்டில் ரூ.1500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் ரூ.10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத்திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடத்தப்படும்.
அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை தமிழில் மொழி பெயர்த்திட ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்படும். பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 40 கோடி நிதி ஒதுக்கப்படும்
மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும். பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ, 200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும். 54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும்”
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil