தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
நிதி அமைச்சர் கூறியதாவது; மகளிர் சுயஉதவிக் குழுக்களின் திறன் மேம்பாட்டிற்கும் வாழ்வாதார வளர்ச்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்து வருகிறது. இவ்வாண்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, இதுவரை, சுமார் 24,712 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், 30,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெண் தொழில்முனைவோர்கள், தேவையான கடன்களை உரிய நேரத்தில் பெறுவதிலும், பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், தொடர்ந்து இடர்பாடுகளை சந்திக்கின்றனர்.
இச்சவால்களை எதிர்கொள்ள, பெண்களுக்கென சிறப்பு ‘புத்தொழில் இயக்கம்’ ஒன்றை அரசு தொடங்கும். பெண் தொழில்முனைவோர், புத்தொழில்களை தொடங்குவதற்கு அனைத்து வகையிலும் இந்த இயக்கம் உதவும் என்று நிதி அமைச்சர் கூறினார்.
மேலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும்; அண்ணா பிறந்தநாளான செப்.15-ம் தேதி இத்திட்டம் தொடங்கும்; தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“