/indian-express-tamil/media/media_files/5vBjnph6I7dsYr8g4VxK.jpg)
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலமாக 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்; பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்தப் பட்ஜெட்டில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
இதுகுறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் தெரிவித்ததாவது; ”கடந்த 2010-ம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் உள்ள குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர வீடுகளை அமைத்து தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி கிராம புறங்களில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசைகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எய்திடும் வகையில் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் 8 லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும். முதற்கட்டமாக 2024-25 ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் குடியிருப்பு வீடுகள் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாத பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இந்த புதிய திட்டம் ’கலைஞரின் கனவு இல்லம்’ என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்,” என்று நிதியமைச்சர் அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.