/tamil-ie/media/media_files/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-29-at-1.47.25-PM.jpeg)
Trichy
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதன் பிறகு கோவிந்தராஜுலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபாதை கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்களை ஒழுங்கு படுத்துவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறோம்.
நடைபாதை மற்றும் சாலையோர கடைகளில் வியாபாரம் செய்வோருக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. சென்னை போன்ற பெருநகரங்களில் நடைபாதை கடைகளுக்கென பிரத்தியேகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு அவர்கள் கடைகளை நடத்தி வருகின்றனர்.
அதே போன்று திருச்சி மாநகராட்சி பகுதியிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு அவர்கள் வியாபாரம் செய்து கொள்வதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை.
எனினும் என்.எஸ்.பி.ரோடு, சிங்காரதோப்பு, தேரடிக்கடை வீதி, பெரியகடை வீதி, நந்தி கோவில் தெரு, சின்னக்கடை வீதி உள்ளிட்ட வணிகப் பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கென கடைகள் ஒதுக்கீடு செய்திடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.
மேலும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் இடம் பெற வேண்டும். எங்கள் தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே அவர்களுக்கு இடம் வழங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
இப்பிரச்சனை தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிட வேண்டாம், பெரிய வணிக நிறுவனங்களுக்கும், தரைக்கடை வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார். செய்தியாளர் சந்திப்பின்போது சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“vvv
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.