/indian-express-tamil/media/media_files/2025/04/27/Hd6wKBbQ2ShFKdw4RaAJ.jpg)
மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார். அமைச்சரவையில் யாருக்கு எந்தத் துறை எனும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார். அமைச்சரவையில் யாருக்கு எந்தத் துறை எனும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியேற்றார். அவர் அமைச்சராக உள்ளதால் அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளை மிரட்ட வாய்ப்பு உள்ளதாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி புகார்தாரர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமைச்சர் பதவியா? அல்லது ஜாமீனா? என்பதை 28-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கெடு விதித்தது. இதனால், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகலாம் என்று பேசப்பட்டது.
அதே போல, தி.மு.க மூத்த தலைவரும் வனத்துறை அமைச்சருமான பொன்முடி அண்மையில் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையான நிலையில், தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்.
பொன்முடி வகித்த வனத்துறை, பால்வளத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி கவனித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வத்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு மீண்டும் பால்வளத்துறை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஏப்ரல் 28-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.