சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக உருவெடுத்தது. இது நேற்று (டிசம்பர் 9ஆம் தேதி) அன்று சென்னையை கடந்து நள்ளிரவு மாமல்லபுரம் வழியாக கரையை கடந்தது.
இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், புயல் காற்று பெருமளவு சேதப்படுத்தியுள்ளது. மரங்கள் உடைந்து பாதைகளை மறைத்தபடி கிடப்பது, சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பது, பல்வேறு இடங்களில் மக்கள் வீட்டுக்குள்ளே மழைநீர் வருவது என்று பாதித்துள்ளது.
இதனால் இன்று (டிசம்பர் 10ஆம் தேதி) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் நிலையையும் நகரில் உள்ள சூழலையும் ஆய்வு செய்ய களத்திற்கு சென்றார்.
மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சென்னை பெருங்குடி மண்டலம், வார்ட் -181க்குட்பட்ட குப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்ட்-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த படகுகளை தமிழக முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil