/indian-express-tamil/media/media_files/2025/05/26/TCEbSF0HPWfSSTLR0zuS.jpeg)
பா.ஜ.க தேசத்தை கொள்ளை அடித்து நாட்டையே துவம்சம் செய்யும் கட்சி. தேசத்தை கொள்ளையடிக்க வந்த திருடர்கள் தான் பா.ஜ.க.,வினர். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் உறுதியாக உள்ளது. இது கொள்கை கூட்டணி, இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட வேண்டும் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள், அந்த கனவு பலிக்காது. எந்த கொம்பனாலும் இந்தியா கூட்டணியை அசைக்க முடியாது என திருச்சியில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருச்சி மாநகரம் புத்தூர் பகுதியில் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை முதலமைச்சர் கடந்த 8 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த நிலையில் திருச்சியில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப் பெருந்தகை தெரிவித்ததாவது; திருச்சியில் சிவாஜி சிலையை திறந்த முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டது தொடர்பாக சிலர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். ஆனால் இந்த நிதியாண்டில் தான் எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாக தமிழ்நாட்டை புறக்கணித்து உள்ளார்கள். தேசிய கல்வி கொள்கை ஏற்று கொண்டால்தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என கூறுகிறார்கள். இது சர்வாதிகாரம்.
காங்கிரஸ் ஆட்சியின் போது ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம் அந்தத் திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கூறினார். இருந்த போதும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கினோம். பா.ஜ.க தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கிறது. தமிழ்நாட்டு அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் தமிழக அரசின் துறைகள் மீதும் தொடர் தாக்குதலை ஒன்றிய அரசு நடத்துகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு கொடுத்துள்ளது. இது மிகப்பெரிய கேடு.
மாநிலங்களுக்கான கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற மாட்டோம், எதுவாக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தை நாடிதான் நீதி பெற வேண்டும் என்கிற நிலை இருந்தால் எதற்காக ஒன்றிய அரசு? ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களையும் அரவணைத்து ஆட்சி செய்ய வேண்டும். பா.ஜ.க விற்கும் அதிமுகவிற்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட அமைப்புகள் ஆன்மிகத்தை அரசியலாக்குகின்றன. கலவர பூமி ஆக்குவது தான் அவருடைய நோக்கமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி தேச பக்தர்களை கொண்ட கட்சி. ஆனால் பா.ஜ.க தேசத்தை கொள்ளை அடித்து நாட்டையே துவம்சம் செய்யும் கட்சி. தேசத்தை கொள்ளையடிக்க வந்த திருடர்கள் தான் பா.ஜ.க.,வினர்.
பெரியார் தன்னுடைய ஜாதி அடையாளத்தை துறந்தவர். ஆனால் ஜாதி அடையாளத்தோடு யு.பி.எஸ்.சி தேர்வில் கேள்விகள் வைப்பது தமிழ்நாட்டை கலவர பூமியாக்கும் பா.ஜ.க வின் திட்டத்தின் வெளிப்பாடே. வேண்டுமென்றே ஜாதி அரசியல் செய்வது பா.ஜ.க. மதரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் நாட்டை பிரிக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் அஜெண்டா, அதைதான் அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள். இந்தியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. இது உறுதியான கூட்டணி, தமிழக மக்களுக்கான கூட்டணி, தமிழ்நாட்டைக் கடந்து
தேசத்தை பாதுகாக்கும் கூட்டணி. இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் உறுதியான கூட்டணி.
இந்த கூட்டணி உடையும் என யாரும் பகல் கனவு காண வேண்டாம். இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணி, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் கூட்டணி. பெண்களுக்கு எதிரான கட்சி தான் பா.ஜ.க. அவர்கள் பிற்போக்குவாதிகள்” இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையுடன் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கலை, ரெக்ஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, திருச்சியில் 'ஜெய் ஹிந்த், தேசம் காக்கும் ராணுவத்தினருக்கு சல்யூட்' என்ற தலைப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்காளான ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேற்பார்வையாளர் சூரஜ் ஹெட்டே, பாராளுமன்ற கரூர் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.