மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று (டிசம்பர் 14) மரணமடைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த நவம்பர் 11 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மியாட் மருத்துவமனையில் அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர். தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திடீரென நேற்று இரவில் இருந்து இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்தநிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று மரணமடைந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“