குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுனர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று, காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ, மற்றும் ம.தி.மு.க போன்ற கட்சிகள் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்து ஆளுனருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சட்டமன்றத்தில் தமிழக அரசு இயற்றும் சட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்துவது, சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுனர் உரையில் விட்டு விட்டு வாசிப்பது என பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஆளுனரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே, வரும் ஜனவரி 26-ந் தேதி இந்திய குடியரசு தினவிழா கொண்டாப்பட உள்ள நிலையல், குடியரசு தினத்தில் ஆளுனர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை.
சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். இவரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று பதிவிட்டுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுனர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாக நடக்கும் நிகழ்வு. இதற்காக, ஆளுனர் மாளிகையில் இருந்து, தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி, இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், கட்சிகளும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.