தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு நிகரான சம்பளம்: ஐகோர்ட் உத்தரவு

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்போதைக்கு முடித்து வைப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர்

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்போதைக்கு முடித்து வைப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tn nurse salary

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகளில் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெறும் 4 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே இதுவரை பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து, நிரந்தர மற்றும் தொகுப்பூதிய செவிலியர்களின் பணிகளை ஒப்பிட்டு, ஆறு மாதங்களில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

எனினும், இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாததால், செவிலியர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொகுப்பூதிய செவிலியர்கள் மற்றும் நிரந்தர செவிலியர்களின் பணி குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தது.

Advertisment
Advertisements

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மூன்று மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்போதைக்கு முடித்து வைப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்த உத்தரவு, நீண்ட காலமாக சம ஊதியத்திற்காக காத்திருக்கும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது..

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: