திருச்சி மத்திய வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு, தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து இக்கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், தி.மு.க மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு பேசும்போது; ஒரு பரபரப்பான செய்தியை சொன்னார்கள், விஜய் கட்சி தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் சேரப் போகிறார் என சொன்னார்கள், உள்ளூரில் விலை போகாத பிரசாந்த் கிஷோரை வரவழைத்துள்ளார், பிரசாந்த் கிஷோர் பிகாரில் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்கவில்லை, ஆனால் அவர் இங்கு வந்து தேர்தல் வியூகம் கூறுகிறார் என்றால் எந்த அளவுக்கு அவர்களது வெற்றி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.
பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பணியாற்றி விட்டு தற்போது மாற்று கட்சியில் பணியாற்ற சென்றுள்ளார், அவரை எப்படி எதிர்கொள்வது என்பது தமிழக முதல்வருக்கு தெரியும். தமிழக முதல்வர் தி.மு.க.,வை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என பேசினார்.
பிரசாந்த் கிஷோர் சென்னை த.வெ.க இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சரும், தி.மு.க முதன்மைச் செயலாளருமான கே.என் நேரு கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
க.சண்முகவடிவேல்