/indian-express-tamil/media/media_files/amVO1qHpeCk8UvuWkENT.jpg)
தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் 74 ஆயிரமாக உயர்வு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் தற்போதுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 68 ஆயிரத்திலிருந்து 74 ஆயிரமாக அதிகரிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் புதிதாக 6,000 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட உள்ளன.
ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் வாக்குச்சாவடிகள் குறித்து, ஒரு வாரத்திற்குள் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி செய்யுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள்
இதற்கிடையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டப் பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, வாக்குச்சாவடி அலுவலர்களாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்பாராத சூழ்நிலைகளில் அவர்கள் பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டால், இந்த புதிய பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அர்ச்சனா பட்நாயக் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.