/tamil-ie/media/media_files/uploads/2018/02/a312.jpg)
மின்வாரிய ஊழியர் சங்க நிர்வாகிகளுடன், அதிகாரிகள் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டப்படி 16ம் தேதி மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 2015 டிசம்பர் 1ம் தேதி 11-வது ஊதிய ஒப்பந்தம் அமைத்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஒப்பந்தம் அமைக்கப்படவில்லை. ஊதிய உயர்வு தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக, 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்குவதாக அதிகாரிகள் கடந்த அக்டோபர் 21-ம் தேதி ஒப்புக்கொண்டனர்.
அதன்பிறகும், ஊதிய ஒப்பந்தம் அமைக்கப்படாததால் கடந்த 23-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த 22-ம் தேதி நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பிப்ரவரி 12-ம் தேதிக்குள் ஊதிய ஒப்பந்தம் அமைக்கப்படும் என மின்வாரியம் உறுதி அளித்ததால் வேலைநிறுத்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மின் துறை அமைச்சர் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாக இடைக்கால நிவாரண அறிவிப்பை கடந்த 31-ம் தேதி அறிவித்தார். 12-ம் தேதிக்குள் புதிய ஊதிய ஒப்பந்தம் அமைக்கப்படும் என உறுதி அளித்துவிட்டு திடீரென இடைக்கால நிவாரணம் அறிவித்ததால், மின் வாரிய ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, 2 ஆண்டுகள் கடந்தும் ஊதிய உயர்வு வழங்காத மின்வாரியத்தை கண்டித்து பிப்.16-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதற்கிடையில், இன்று மின்வாரிய ஊழியர் சங்க நிர்வாகிகளுடன், அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இதனால், திட்டமிட்டபடி வரும் 16ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.