108 freezed, alternative number announced: தமிழ்நாட்டில் அவசர உதவிக்கான அழைப்பு எண் 108, திடீரென முடங்கியது. உடனடியாக மாற்று எண் அறிவிக்கப்பட்டது. எனினும் சில மணி நேரங்களில் 108 சேவை சரி செய்யப்பட்டது.
108 என்கிற எண், தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள் வரை நெருக்கமான ஒரு எண்! அவசர உதவிக்கு தனியார் ஆம்புலன்ஸை அழைக்கத் தேவையில்லாமல், இந்த எண்ணை அழைத்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பலன் பெற்று வருகிறார்கள்.
வாகன விபத்துகள், தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கு 108-ல் அழைத்து மக்கள் பலன் பெற்று வருகிறார்கள். இந்த எண்ணுக்கான அழைப்புக்கு கட்டணம் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நிதி உதவியுடன் தனியார் நிறுவனம் இந்த சேவையை செய்து வருகிறது.
இந்தச் சூழலில் இன்று (அக்டோபர் 8) மதியத்திற்கு பிறகு 108 சேவை திடீரென முடங்கியது. 108 சேவைக்கு பி.எஸ்.என்.எல் இணைப்பு வழங்குவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டது.
எனினும் இது தற்காலிக முடக்கம்தான் என்றும், விரைவில் சரி செய்யப்படும் என்றும் அதுவரை 044-40170100 என்கிற எண்ணை அவசர தேவைகளுக்கு அழைத்து உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தற்காலிக எண்ணும், இலவச அழைப்பாகவே அமைகிறது.
எனினும் அடுத்த சில மணி நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, 108 சேவை மீட்கப்பட்டது.