ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் இ.வி.கே.எஸ். இலங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம்தமிழர் கட்சியின் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வேட்பாளர் மேனகாவுக்காக ஈரோடு வீரப்பசத்திரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கட்சி தொண்டர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலர் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பல தொண்டர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,
விதியை மீறி அனுமதி இல்லாத தெருக்களில் வாக்கு சேகரித்ததாக கூறுகிறார்கள். அப்படி என்றால் திமுக அதிமுக கட்சியினர் அனுமதி பெற்றுதான் இந்த வேலைகளை செய்து வருகிறார்களா? அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா? இதுதான் ஜனநாயகமா? வாக்கு சேகரித்துக்கொண்டு அமைதியாக வந்துகொண்டிருந்த எங்கள் மீது எதற்காக தாக்குதல் நடத்தினார்கள்?
மாடியில் கற்களை சேகரித்து வைத்துக்கொண்டு அதை வைத்து எங்கள் மீது தாக்குகிறார்கள். இதில் எங்கள் பிள்ளைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது காரை அடித்து நொறுக்கிவிட்டார்கள். எங்கள் மீது தாக்குதல் நடத்தியது திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தான். அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் வந்துவிட்டார்கள். நாங்களும் அதே மாதிரி வந்திருந்தால், தேர்தல் நடக்காது சண்டைதான் நடக்கும். இப்படித்தான் ஆட்சி நடத்துவார்களா என்ன இது ஜனநாயகமா இது கேடுகெட்ட பணநாயகம் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/