மக்களின் ரயில் பயணத்தை எளிதாகும் வகையில், தெற்கு ரயில்வே பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதில் ஒன்றாக, தற்போது 44 ரயில் சேவைகளை அதன் அதிகபட்ச வேகத்தில் இயக்க அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில் இருந்து கூடூர் வரை, அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை பயணிக்கும் ரயில் சேவைகள் உட்பட 44 ரயில் சேவைகளின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து மாற்றம் செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை-கூடூர், சென்னை-ரேணிகுண்டா மற்றும் அரக்கோணம்-ஜோலார்பேட்டை பிரிவுகளில் (413.62 கி.மீ.) செல்லும் ரயில்களின் 110 கிலோமீட்டர் வேகம் தற்போது, 130 கிலோமீட்டர் வேகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு-அரக்கோணம், சேலம்-நாமக்கல்-கரூர், வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், 1,218 கிலோமீட்டர் தொலைவுக்கு, அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகமான 100 கிலோமீட்டரில் இருந்து, 110 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் வடக்கு-மேட்டுப்பாளையம், திருச்சிராப்பள்ளி-புதுக்கோட்டை, கங்கைகொண்டான்-திருநெல்வேலி, பழனி-பொள்ளாச்சி என 406 கிலோமீட்டர் பாதையில் பயணிக்கும் ரயிலின் வேகம் தற்போது மணிக்கு 80-90 கிலோமீட்டரில் இருந்து 100 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மண்டலம் முழுவதும் 15 கிமீ முதல் 30 கிமீ வரை மொத்தம் 1,445 கிலோமீட்டர் ரயில் பாதை நீளத்திற்கு தெற்கு ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரிவு வேகத்தை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக, அனைத்து உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்த இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரயில் பாதையை புதுப்பித்தல், ரயில் சேவைகள் செல்லும் பாலங்களை வலுப்படுத்துதல், வளைவுகளை எளிதாக்குதல் என ரயில் பயணங்களில் மக்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரிசெய்ய தெற்கு ரயில்வே இந்த முடிவு எடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil