/indian-express-tamil/media/media_files/2025/09/07/pr-pandian-paddy-2025-09-07-14-52-22.jpeg)
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் பட்டுக்கோட்டை பகுதிகளில் கார்காவயல், பண்ணவயல் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர். பாண்டியன் தெரிவித்ததாவது: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் வரலாற்றில் இல்லாத வகையில் சுமார் 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் துவங்கி உள்ளது.
பட்டுக்கோட்டை பகுதியில் காரீப் கொள்முதல் முடிந்து ராபி கொள்முதல் துவங்குவதில் நிர்வாக ரீதியான காலதாமதம் ஏற்பட்டதால் கொள்முதல் நிலைய வாயில்களில் தலா 10000 அளவில் நெல் சிப்பங்கள் குவிந்து கிடக்கிறது. இதனை உடனடியாக கொள்முதல் செய்வதற்கு கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும்.
தற்போதைய நிலையில் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டால் தான் அறுவடையையே துவங்க முடியும். இதனை உணர்ந்து கொள்முதல் நிலையங்களை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சென்ற சம்பா பருவத்திற்கு திறக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் குறுவை கொள்முதல் செய்வதற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும்.
அன்றாடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும். ரயில்வேகன்கள் தேவைக்கேற்ப ஏற்பாடு செய்திட வேண்டும். மீதமுள்ள நெல் மூட்டைகளை திறந்தவெளி கிடங்குகளை ஏற்படுத்தி சேமித்து வைக்க முன் வர வேண்டும். கொள்முதல் நிலைய வாயில்களிலேயே சேமித்து வைப்பதால் மழை காலங்களில் நெல் வீணடிக்கப்படுகிறது.
மேலும், அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் நிலைய வாயில்களில் கொட்டி வைத்து விற்பனை செய்வதற்கு முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, உடனடியாக கொள்முதலை தீவிரப்படுத்துவதற்கான வகையில் அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி வைத்து விவசாயிகள் கருத்தை கேட்டு கொள்முதலை தீவிரப்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.
மின்வாரியம் 50 ஆயிரம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்குவதற்கு 2023 சட்டபேரவை கூட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரையிலும் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. தமிழக அரசு அனுமதி வழங்காததால் இணைப்பு வழங்க இயலவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எனவே, விரைந்து சட்டமன்றத்தில் அறிவித்த அடிப்படையில் மின் இணைப்புகளை உடன் வழங்கிட வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஊரணிபுரம் அ.ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் அதம்பை ஆர் ரவிக்குமார், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் வீ.மணிவாசகம், செயலாளர் பாலமுத்தி சிதம்பரம், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் அருள்சாமி, பட்டுக்கோட்டை அதம்பை முத்தமிழ் செல்வன், மதுக்கூர் தெய்வசிகாமணி, கீழபழம்பூர் பாலசுப்பிரமணியம் பேராவூரணி ஒன்றியம் குப்பத்தேவன்வலசல் இளங்கோவன், வீர பெருமாள்,உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.