/indian-express-tamil/media/media_files/Vi8hmfzmhnQbWESE4bnx.jpg)
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கும் உரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, உடனடியாகத் தேவையான உரங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த ஆண்டு பருவமழை அதிகரித்ததன் காரணமாக, நெல் சாகுபடிப் பரப்பு கடந்த ஆண்டை விட சுமார் 10% அதிகரித்துள்ளது. இதனால், யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களுக்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் உர உற்பத்தியாளர்கள் போதிய அளவு உரங்களை வழங்கவில்லை. மொத்த ஒதுக்கீட்டில் வெறும் 57% மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய காரீப் மற்றும் வரவிருக்கும் ராபி பருவத்திற்குத் தேவையான உரங்களான 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி, 12,422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும், இடுபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த உரத் தட்டுப்பாடு விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். இந்தக் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதனால் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய உரங்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் உரப் பற்றாக்குறையை தவிர்த்திட உரங்களை விரைந்து வழங்க வேண்டும். தேவையான அறிவுரைகளை ரசாயன மற்றும் உர அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us