/indian-express-tamil/media/media_files/apP4Z8ndJZN0YB1HdbXC.jpg)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு ஜூலை 15 முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றும் வகையில், கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இந்த உரிமை தொகைக்காக மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இருப்பினும் தகுதி இருந்தும் பலருக்கும் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து, மேல்முறையீட்டிற்குப் பிறகு இரண்டாம் கட்டமாக 2023 நவம்பர் மாதம் 7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. தற்போது 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர மேலும் 11.85 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகைக்காக மேல் முறையீடு செய்திருந்துள்ளனர். இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுந்தன. இந்தநிலையில், மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களின் வங்கி கணக்கில் ஜூலை 15 ஆம் தேதி முதல் ரூ.1000 உரிமைத் தொகை செலுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2 ஆவது கட்ட தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு காரணங்களால் விடுபட்டுள்ள இவர்களுக்கு உரிமைத் தொகை ஜூலை 15 முதல் விடுவிக்கப்படும்" என தெரிவித்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.