/indian-express-tamil/media/media_files/2025/10/10/annamalai-2025-10-10-08-23-21.jpg)
Tamil nadu
தீண்டாமைக்கான வசைச் சொல்லாகக் கருதப்படும் 'காலனி' என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் பழக்கத்திலிருந்தும் நீக்குவதெனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அத்துடன், சாலைகள், தெருக்கள், குடியிருப்புகள் மற்றும் பிற பொது உள்கட்டமைப்புகளில் உள்ள சாதிப் பெயர்களையும் நீக்குதல் அல்லது மறுபெயரிடுதல் பணியைத் துவங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ள இந்த அரசாணையின்படி, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் (ஏப். 29) அறிவித்ததின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாதி, மதம் போன்ற வேறுபாடு இல்லாத சமூக அமைப்பை நோக்கிய அரசின் பணியாக இது பார்க்கப்படுகிறது. இந்த அரசாணையை, வருவாய் நிர்வாக ஆணையர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் குறிப்பிட்ட காலவரம்பிற்குள் செயல்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் கண்டனம்
இந்த அரசாணை வெளியான நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது X பக்கத்தில் வெளியிட்ட கண்டன பதிவில் ”தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்டு தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சாதிப் பெயர்களுக்கான மாற்றுப் பெயர்களை வைக்க சில எடுத்துக்காட்டுகளையும் வழங்கி இருக்கிறது. அவற்றில், மாபெரும் தலைவர்களான, அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, அயோத்திதாசர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை தி.மு.க அரசு புறக்கணித்திருப்பது ஏன்? அவர்களை இன்னும் பட்டியல் சமூகத் தலைவர்களாக மட்டுமே தி.மு.க அரசு பார்க்கிறதா?
மேலும், தி.மு.க அரசு கொடுத்துள்ள பட்டியலில், ராணி வேலு நாச்சியார், கொடிகாத்த குமரன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தமிழகத்தின் பெருமைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைப் புறக்கணித்திருக்கிறது.
அப்படி அந்தப் பட்டியலில் இருக்கும் மாபெரும் தலைவர்கள் யார் என்று பார்த்தால், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
தனக்குத்தானே சிலை வைப்பது, தனக்குத் தானே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்வது என்று உங்கள் தந்தை செய்த நகைச்சுவைகள் போதாதென, தற்போது பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, அவரை மிஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே.
உங்கள் குடும்ப நிறுவனங்களுக்கே உங்கள் தந்தை பெயரை வைக்காத நீங்கள், பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, மக்கள் வரிப்பணத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு வீணடிப்பீர்கள்? முன்னாள் முதல்வர்கள் பெயரை வைக்கிறோம் என்றால், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பெயர் எங்கே?
சாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய தி.மு.க தலைவரின் பெயரைத் திணிக்க முயற்சிக்கும் தி.மு.க அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திருத்தி, மேற்கூறிய அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் இணைத்து, புதிய அரசாணையை வெளியிட வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.