சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று, தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் (Tamil Nadu Governing Council on Climate Change) முதல் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை சார்ந்த வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு செயல்படுவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்க, இந்த கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை எடுத்து செயல்படுகிறார்.
இந்த கூட்டத்திற்கு, பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா, இன்ஃபோசிஸ் நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன் எம்.நிலேகனி, ஐ.நா. சபை முன்னாள் துணை பொதுச் செயலர் எரிக் எஸ்.சோல்ஹிம், நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் ரமேஷ் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜாஆகியோர் சிறப்பு உறுப்பினர்களாக பங்கேற்றனர்.
மேலும், அரசு தலைமைச் செயலர், மாநில திட்டக்குழு துணைத் தலைவர், தொழில், நகராட்சி நிர்வாகம், நிதி, எரிசக்தி, ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, பால் வளம்,மீன் வளம், மீனவர் நலம், வேளாண்மை மற்றும் உழவர் நலம் ஆகிய துறைகளின் செயலர்கள் குழு உறுப்பினர்களாக பங்குபெறுகின்றனர். இந்த குழு ஒருங்கிணைப்பாளராக சுற்றுச்சூழல் துறை செயலர் செயல்படுகிறார்.
காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், அவை நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், காலநிலை மாற்ற செயல் திட்டத்தை உருவாக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.