/indian-express-tamil/media/media_files/2025/08/28/pilavakkal-2025-08-28-12-09-29.jpg)
கூமாப்பட்டி அணைக்கு ரூ.10 கோடி: பூங்கா மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு, முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் அறிவித்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையாகும்.
இந்த அறிவிப்பு, அண்மையில் தங்கப்பாண்டி என்ற இளைஞர் வெளியிட்ட வீடியோக்களால் கூமாப்பட்டி கிராமம் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்ததைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. "கூமாப்பட்டி தனி ஐலேண்டு," "சொர்க்க பூமி," "இந்த தண்ணீல குளிச்சு பாருங்க எந்த வியாதியும் வராது" என்று அவர் வெளியிட்ட வீடியோக்கள் பரவலாகப் பகிரப்பட்டு, வெளியூர் மக்களையும் ஈர்த்தன.
இந்த வீடியோக்களுக்குப் பிறகு, பிளவக்கல் பெரியாறு அணையை மேம்படுத்த வேண்டும் என்று தங்கப்பாண்டி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்புக்குச் செயல்வடிவம் கொடுக்கும் விதமாக, தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிதி மூலம் பிளவக்கல் அணையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில், சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், மற்றும் செல்ஃபி பாயிண்ட் போன்றவை அமைக்கப்படவுள்ளன. அரசாணையும், நிதியும் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கூமாப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். தங்கப்பாண்டியின் வீடியோக்கள், இந்த கிராமத்திற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, அதன் அழகியலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.