/indian-express-tamil/media/media_files/2025/09/27/stalin-10-lakhs-2025-09-27-22-33-35.jpg)
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 36 பேர் பலி: தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க ஸ்டாலின் உத்தரவு
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய்யின் வாகனம் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து மருத்துவமனையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் அணி வகுத்தபடி செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்துக்கு விரைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பிறகு, கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூபாய் 1 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கூட்டநெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.