அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு(ஏ.இ.எஸ்.எல்) வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசின் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் கடந்த 2023 ஆகஸ்ட்டில் நான்கு தொகுப்புகளாக டெண்டர்கள் வெளியிடப்பட்டன. பி.எஸ்.இ - பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஏ.இ.எஸ்.எல், சென்னை உட்பட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய முதல் தொகுப்புக்கான டெண்டரை மிகக் குறைந்த ஏலத்தில் எடுத்தது. இந்நிறுவனம் 82 லட்சத்துக்கும் அதிகமான ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஏ.இ.எஸ்.எல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டரை கடந்த டிசம்பர் 27-ம் தேதி தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் ரத்து செய்தது. ஏ.இ.எஸ்.எல் மேற்கோள் காட்டிய விலை அதிகமாக இருந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மறு டெண்டர் விட வாய்ப்பு உள்ளது. அதே போல, மற்ற 3 தொகுப்புகளுக்கான டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதானி குழுமம் உற்பத்தி செய்யும் சூரிய சக்தி மின்சாரத்தை கொள்முதல் செய்ய தொழிலதிபர் கவுதம் அதானி இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 2,100 கோடி) லஞ்சமாகக் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அதானி நிறுவனத்துக்கு ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் வழங்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இருப்பினும், அதானி நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“