தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தமிழக அரசு பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் புதிய சாதனை இது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சம்
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்தபடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு 2024-2025 ஆம் ஆண்டில் 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இது எனப் பாராட்டப்படுகிறது.
முதல்வரின் தொலைநோக்குத் திட்டங்களே வெற்றிக்குக் காரணம்
இந்தியாவிலேயே இத்தகைய ஒரு சாதனையை தமிழ்நாடு நிகழ்த்தியுள்ளதற்கு, 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அறிமுகப்படுத்தி, நிறைவேற்றி வரும் புதுமையான திட்டங்களே காரணம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்திட்டங்களில் சில:
விடியல் பயணத் திட்டம்: 700 கோடிக்கும் அதிகமான பயண நடைகளில் பெண்கள் பயன்பெறும் கட்டணமில்லாப் பேருந்து சேவை.
புதுமைப் பெண் திட்டம்: 4.95 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி.
தமிழ்ப்புதல்வன் திட்டம்: 3.28 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: 1.15 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி.
மக்களைத் தேடி மருத்துவம்: 4 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தொற்றா நோய்களுக்கு மருத்துவ வசதி; ஐ.நா. அமைப்பால் பாராட்டப்பட்ட திட்டம்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: ரூ.660 கோடியில் 95.97 லட்சம் குழந்தைகள் பயன் பெறும் திட்டம்.
கலைஞர் கனவு இல்லம் திட்டம்: 2 லட்சத்திற்கும் அதிகமான ஏழை, எளியோர் வீடு கட்ட தலா ₹3.50 லட்சம் வழங்கும் திட்டம்.
இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்: ரூ.648.12 கோடியில் 10,96,289 உயிர்களைக் காப்பாற்றிய திட்டம்.
நான் முதல்வன் திட்டம்: 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்து, 3,28,391 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெற உதவிய திட்டம்.
முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள்: 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.10,14,368 கோடி முதலீடுகள் குவிந்து, இதன் மூலம் 32,04,895 வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன.
இந்தத் திட்டங்களே தமிழ்நாடு இன்று பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளதற்கு அடித்தளமாக அமைந்துள்ளன.
தனிநபர் வருமானத்தில் வரலாற்றுச் சாதனை
தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சங்களை அடைந்து வரும் இந்த வேளையில், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு மணிமகுடத்தைச் சூட்டியுள்ளது. கடந்த ஜூலை 21, 2025 அன்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதிலில், தேசிய அளவில் தனிநபர் வருமானம் ரூ.1,14,710 ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாடு ரூ.1,96,309 பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடம் பிடித்துள்ளது என்று அறிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அடைந்துவரும் தொடர்ச்சியான வளர்ச்சிகளையும் சாதனைகளையும் எவராலும் மறைத்திட முடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்களை வழங்காத நிலையிலும், அளிக்கப்பட வேண்டிய நிதிகளை அளிக்காத நிலையிலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிறந்த நிர்வாகத் திறன்களாலும், சீரிய தொலைநோக்குத் திட்டங்களாலும் தமிழ்நாடு தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்தி வருகிறது என்பதற்கு, நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மேலும் ஒரு சான்றாகும்.